சீயோனிலே தேவசந்நிதியில் சேருவதற்கு (சங்கீதம் 84 : 5 , 7 )

தேவனுக்கு  மகிமை!

சீயோனிலே தேவசந்நிதியில் சேருவதற்கு

"
உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்".  சங்கீதம் 84:5,7.

பெலிஸ்திய தேசத்தில் இருந்த கர்த்தருடைய பெட்டியை  இஸ்ரவேலுக்குத் திரும்பி அனுப்புவதற்கு வண்டிலின்மேல் வைத்து அந்த வண்டியை இழுக்க பசுக்களை அதில் கட்டப்பட்ட போதும் அந்த வண்டி இஸ்ரவேலுக்கு செவ்வையாய்ச் சென்றதற்குக் காரணம், தேவனுடைய பெலத்தின் பெட்டி (2 நாளாகமம் 6:41) அந்த வண்டியில் இருந்ததுதான் (1 சாமுவேல் 6:11-12). நாம் இஸ்ரவேல் மக்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​யாக்கோபின் தேவனே அவர்களுடைய பெலனாக இருந்தார் (சங்கீதம் 81:1). எனவே, நமக்கு ஒரு நிழலாக, தேவன் தம்முடைய ஜனங்களான இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்து, வனாந்தரத்தின் வழியாக அவர்களைக் கானான் தேசத்திற்கு வழிநடத்தியபோது, ​​அவர்களுக்கு வழியைக் காண்பிக்க தேவன் அவர்களுக்கு முன்பாகச் சென்றுக்கொண்டிருந்தார் (யாத்திராகமம் 13:21). அவர்களுடைய பெலனாகிய கர்த்தர் அவர்களுடன் இருந்தபடியால், அவர்களுடைய கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை (சங்கீதம் 105:37). மேலும், அவர்களுடைய தேவன் அவர்களுடன் இருந்ததினால் அவர்களுக்கு காண்டாமிருகத்துக்குக்கொத்த பெலனும் உண்டாயிருந்தது (எண்ணாகமம் 23:21-22). அவர்களுடைய பெலன் தங்களுடைய தேவனானபடியால், தேவன் அவர்களைக் கானானுக்கு வழிநடத்தினார். ஆகையால், நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், நாம் எப்போதும் தேவனில் பலப்படுத்தப்பட்டு பெலத்தோடு வாழ வேண்டும். அப்படியானால் ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாக இருந்தாலும் (மத்தேயு 7:14), தேவன் சீயோனுக்குச் செல்லும் வழியை நமது இருதயங்களில் செவ்வையான வழியாக்குகிறார் (சங்கீதம் 84:5). நாம் எந்த சஞ்சலமும் தவிப்புமின்றி, சந்தோஷமும் மகிழ்ச்சியுமடைந்து  நித்திய மகிழ்ச்சி உள்ளவராக ஆனந்த களிப்புடன்  சீயோனுக்குப் பிரயாணம் செய்ய முடியும் (ஏசாயா 35:10).

ஆனால் நாம் தேவனை விட்டு விலகினால், தேவன் நம்முடன் இல்லாததால் நாம் பலவீனர்களாவோம். இஸ்ரவேலர் வழியில் இளைத்து விடாய்த்திருக்கையில், ​​தேவன் அவர்களை விட்டு விலகினபடியால் அமலேக்கு வந்து தேவனுக்குப் பயப்படாமல் பின் வந்த பலவீனரையெல்லாம் வெட்டினான் (உபாகமம் 25:17-18). அதை போல, நாம் பலவீனர்களானால், எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிற நமது எதிரியாகிய பிசாசு, நம்மையும் விழுங்கிவிடுவான் (1 பேதுரு 5:8). நமது வாழ்க்கைப் பயணத்தில், சத்துருக்களாக வழியில் பதிவிருக்கிறவர்கள் நம்மை அழித்துவிடுவார்கள் (எஸ்ரா 8:31). ஆகையால், செவ்வையான வழியைத் தேடுகிறதற்கு நாம் உபவாசம் இருந்தும் ஜெபித்தும் (எஸ்ரா 8:21) கர்த்தருக்காகக் காத்திருந்து பெலனைப் புதுப்பித்துக்கொண்டால், நாம் சோர்ந்து போகாமல் நடந்தும் இளைப்படையாமல் ஓடியும்  சீயோனுக்குக் கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் (ஏசாயா 40:31). ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால் அவன் கிரியைகளில் இளைத்து போகிறான் (பிரசங்கி 10:15). அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல் அவாந்தர வழியாய் நடக்கும்போது நமது பெலனாகிய தேவன் நம்மை தபாரிக்கும் ஊருக்கு போய் சேர செவ்வையான வழியில் நடத்துகிறார் (சங்கீதம் 107:4,7).

சாமுவேல் முதலாம் புத்தகத்தின் ஆறாம் அதிகாரத்தை நாம் பார்க்கும்போது, ​​அங்கே வண்டியை இழுத்த பசுக்கள் இஸ்ரவேலுக்குச் செல்லும் பெரும்பாதையான நேர்வழியில் சென்றதற்குக் காரணம் (1 சாமுவேல் 6:11-13) கர்த்தருடைய வல்லமை விளங்கும் பெட்டி அந்த வண்டியில் இருந்ததால்தான் (சங்கீதம் 132:8). எனவே, நாம் கர்த்தரையும் அவருடைய வல்லமையையும் தேடுகிறவர்களாயிருந்தால் (1 நாளாகமம் 16:11) நாமும் சீயோனுக்குச் செல்லும் பெரும்பாதையில்  பயணம் செய்ய முடியும். அது மட்டும் அல்ல இப்படியாக பயணம் செய்வதற்கு அந்த பசுக்களின் சில குணாதிசயங்களை நாமும் பெற்றுக்கொள்ள முடியும். முதலாவதாக, அவை தங்கள் கன்றுக் குட்டிகளை தேடி போவதில்லை (1 சாமுவேல் 6:10). தேவன் நமது பெலனாக   நம்மை வழிநடத்துவதால் நாம் தேவனைவிட மகனையாவது மகளையாவது அதிகமாக நேசிப்பதில்லை (மத்தேயு 10:37). நாம் மற்ற எல்லோரையும்விட தேவனை அதிகமாக நேசிக்கிறோம் (யோவான் 21:15). இரண்டாவதாக, அது அறுவடைக் காலம் என்பதால் (1 சாமுவேல் 6:13) வைக்கோல் கிடைத்தாலும், அவை மேய்வதற்காக வயல்களுக்குச் செல்வதில்லை. என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று பூமிக்குரியவைகளைக் குறித்துக் கவலைப்படாமல் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறார்கள் (மத்தேயு 6:31-33). ஆபிரகாமைப் போல தேவன் பார்த்துக் கொள்வார், விசாரித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறார்கள் (ஆதியாகமம் 22:8). மூன்றாவதாக, அவைகள் கூப்பிட்டுக் கொண்டே பயணம் செய்தது (1 சாமுவேல் 6:12). இயேசு தமது மாம்சத்தில் இருந்த நாட்களில் பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் தேவனிடம் விண்ணப்பம் பண்ணி வேண்டுதல் செய்தார் (எபிரேயர் 5:7). அதை போல, நாமும் அவருக்கு முன்பாக நிற்பதற்கு பாத்திரவான்களாகும் படிக்கு எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருக்க முடியும் (லூக்கா 21:36). நான்காவதாக, அவைகள் வலது இடது பக்கமாய் விலகவில்லை (1 சாமுவேல் 6:12). தேவனுடைய எல்லா சட்டங்களையும் கீழ்ப்படிவதால்  தேவனுடைய வார்த்தையிலிருந்து இடப்புறமோ வலப்புறமோ விலகிச் செல்ல முடிவதில்லை (யோசுவா 1:7). தேவன் நம் இருதயத்தை விசாலமாக்கினபடியால் நாம் தேவனுடைய கற்பனைகளின்  வழிகளில் ஓடுகிறவர்கள் ஆகிறோம் (சங்கீதம் 119:32). தேவன் கட்டளையிட்டக் கிரியைகளை முடிவு பரியந்தம் கைக்கொள்ளுகிறவனாக நித்தியத்தில் பிரவேசிக்க முடிகிறது (வெளிப்படுத்தல் 2:26).

ஆகையால், நாம் நம் வாழ்வில் பலத்தின்மேல் பலம் அடைபவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான்  சீயோனிலே தேவசந்நிதியில் சேருவதற்கு முடியும் (சங்கீதம் 84:7). இதற்காக, நாம் நம் வாழ்வில் சில காரியங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக, அக்கிரமத்தில் வாழ்பவன் எவனும் திடப்படுத்தமாட்டான் (எசேக்கியேல் 7:13). ஏனெனில், நம்முடைய அக்கிரமங்கள் நம்முடைய பெலனாகிய கர்த்தரிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றன (ஏசாயா 59:1-2). மட்டுமல்ல நம்முடைய அக்கிரமங்களினால் நம்முடைய பெலன் குறைந்தும் நாம் சோர்ந்தும் போகிறோம் (சங்கீதம் 31:10). தேவன் நம்முடைய எல்லா அக்கிரமங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்போதுதான் நாம் பெலனைப் பெற்று பட்டணத்திற்கு சென்று தேவன் நம்மை பட்டணங்களில் குடியேற்றுவிப்பார் (எசேக்கியேல் 36:33).

இரண்டாவதாக கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நமது பெலனாகும் (நெகேமியா 8:10). ஆசாரியனாகிய எஸ்றாவின் நாட்களில் வீதியிலே கூடி வந்த ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை விளங்கப்பண்ணினார். நியாயப்பிரமாணத்தைத் தீர்க்கமாக வாசித்து அதை கவனமாக கேட்கவும் புரிந்து கொள்ளும்படிக்கு அர்த்தத்தை விளக்கினார்கள் (நெகேமியா 8:8-9). அவர்கள் நியாயப்பிரமாணத்தை வாசித்தபோது, ​​அதைப் புரிந்துகொண்டு, தங்கள் எல்லா அக்கிரமங்களையும் குறித்து விழித்தெழுந்து, அவற்றை அறிக்கையிட்டு அழுதார்கள் (நெகேமியா 9:1-3). அப்படி அழுதவர்களோடு நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் அந்த நாள் கர்த்தருக்கு பரிசுத்தமான நாள் ஆதலால் கர்த்தர் அவரை  சுத்திகரித்தபடியால் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருந்து பலப்படும்படி கூறினார் (நெகேமியா 8:9-10). தாவீது தன் அக்கிரமங்களை எல்லாம் அறிக்கையிட்டு அதை நீக்கி சுத்திகரிப்பதற்காக ஜெபித்தபோது சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் தந்தருளும் என்று கூறினார் (சங்கீதம் 51:7-12). தேவன் நமது அக்கிரமங்களையும் பாவங்களையும் மன்னித்திருப்பதால், தேவன் நம்மைப் பெலப்படுத்தும் படிக்கு இரட்சணியப் பாடல்களால் நம்மைச் சூழ்ந்துகொண்டு பாதுகாப்பார். மேலும், தேவன் போதித்து நாம் நடக்க வேண்டிய வழியை நமக்கு காட்டுவார் (சங்கீதம் 32:5-8). ஆகையால், தேவன் நம்மை இரட்டுடுத்தவும் அழவும் புலம்பவும் மனம்திரும்புவதற்காக அழைக்கும் போது நாம் புசித்தும் குடித்தும் சந்தோஷித்துக் களிப்பவர்களாக இருக்கக்கூடாது. அப்படி செய்தால் நமது அக்கிரமங்கள் நமது மரணம் வரை மன்னிக்கப்படாது (ஏசாயா 22:12-14). நாம் உபவசித்து ஜெபித்து நமது அக்கிரமங்களையெல்லாம் அறிக்கை செய்து சுத்திகரிக்கப்பட்டு சுத்தவான்களாக கர்த்தரிடம் சென்று, எப்பொழுதும் கர்த்தரில் சந்தோஷப்பட்டு, பலம் அடைய வேண்டும் (பிலிப்பியர் 4:4). பரிபூரண ஆனந்தம் தேவ சமூகத்தில் உள்ளது. ஆகையால், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து நாம் பெலன் அடைந்து பெலப்படுவதினால் ​​தேவன் நமக்கு ஜீவ மார்க்கத்தைக் காண்பிக்கிறார் (சங்கீதம் 16:11).

மூன்றாவதாக, பாவ மன்னிப்பைப் பெற்று ஞானஸ்நானம் பெற்ற அப்போஸ்தலனாகிய பவுல், போஜனம் பண்ணிப் பலப்பட்டான் என்று நாம் காண்கிறோம் (அப்போஸ்தலர் 9:18,19). சாப்பிட ஒன்றும் இல்லாமல் பட்டினியாய் வாழ்ந்தால் வழியில் சோர்ந்து போவார்கள் என்று இயேசு கூறினார் (மத்தேயு 15:32). ஆனால் நாம் பூமிக்குரிய அப்பமாகிய போஜனம் புசித்து வாழ்வதற்காக மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்போம்  என்றும் இயேசு கூறுகிறார் (மத்தேயு 4:4). எனவே நாம் அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பித்தால் இயேசு அதை நமக்குத் தருவார் (யோவான் 6:27). ஆகையால், தேவனுடைய வார்த்தைகள் நமக்கு சந்தோஷமும் மகிழ்ச்சியுமாகும்படி நாம் தேவனுடைய வார்த்தைகளைக் கண்டுபிடித்து உட்கொள்ள வேண்டும் (எரேமியா 15:16). கர்த்தருடைய வசனமாகிய நியாயங்கள் பொன்னிலும் பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும் தேனிலும்  தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாகும். அவைகளால் எச்சரிக்கப்படுவதால் அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால்  மிகுந்த பலன் உண்டு (சங்கீதம் 19:9-11). ஆகையால் அவருடைய வாயின் வார்த்தைகளை நமது எழுத்தின் பிரகாரமான ஆகாரத்தை பார்க்கிலும் நாம் அதிகமாய் காத்துக் கொண்டு அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு பின்வாங்காதவர்களாக இருப்போமாக (யோபு 23:11-12). நாம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருடைய வழிகளைவிட்டு விலகாமல், அவருடைய கட்டளைகளின் பாதையில் நடந்தால், அதுவே சீயோனுக்குச் செல்லும் செவ்வையான வழி என்பதால், நாம் பலத்தின்மேல் பலம் அடைந்து சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவோம். நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அதற்கு உதவி செய்து ஆயத்தப்படுத்துவாராக.